என்ன மாதிரியான வலைப்பதிவர் நீங்கள்? – போஸ்ட் மார்டம்

சில நாட்களுக்கு முன் வலைப்பதிவர்களுக்காக சைக்கோ ஜோசியம் மாதிரி ஒரு கணிப்பு நடத்தியிருந்தேன். பலரும் முடிவுகள் ‘குரு‘ என்று தங்களை சொல்வதாக சொல்லியிருந்தார்கள்.

சிலருக்கு சந்தோசம், சிலருக்கு ஆச்சர்யம், இன்னும் சிலருக்கு சந்தேகம்.

நான் அந்த பதிவிலேயே சொல்லியிருந்தது போல் கேட்ட கேள்விகளும் முடிவை கணிக்க உபயோகித்த முறைகளும் இன்னொரு பிரபல தளத்தில் இருந்த சுட்டவை தான். இதனை ‘சுட்ட இடத்திற்கு சுட்டி’ என்று அந்த பதிவிலேயே குறிப்பிட்டிருந்தேன்.

இப்போது இந்த சோதனையின் முடிவுகள்:

வலைப்பதிவுகளின் சாத்தியக்கூறுகள் பற்றி கூறு கூறாக பிரித்து பல முறை ஆராய்ச்சி செய்தாகிவிட்டது. இருந்தாலும் இந்த கணிப்பின் முடிவில் நான் கண்டு கொண்ட ஒரு விசயத்தை இப்போது சொல்லியே ஆக வேண்டும்.

எங்கே இந்த பிரிவினர்?மேலே குறிப்பிட்ட இந்த 5 வகை தவிர இன்னொரு வகை ஒன்றும் வைத்திருந்தேன். அது தங்கள் ‘வாழ்க்கையை‘ பதிவு செய்பவர்களுக்கானது. எவருக்குமே அந்த பிரிவு பொருந்தவில்லை.

நாட்குறிப்பு போல தங்களது வாழ்க்கையில் நடக்கும் விசயங்களை தமிழ் வலைப்பதிவுகளில் எவரும் எழுதுவதில்லை. இதற்கு என்ன காரணம்?

  • சின்ன சின்ன விசயங்களை கூட அந்தரங்கம் என்று பொத்தி வைக்கும் நமது பழக்கம்.
  • அனைவருமே சமூகத்திற்கு ஏதாவது நல்லது செய்ய நினைக்கிறார்கள்
  • தங்களை ஒரு சிந்தனையாளராகவோ, அல்லது சமூக நலனில் அக்கரை உள்ளவராகவோ காட்டிக்கொள்வதில் தான் அனைவரும் முனைகிறார்கள். தங்கள் வாழ்க்கையை பிறருக்கு தெரிவிப்பதால் பிறருக்கு தங்களது பிம்பம் கலைந்து விடுமோ என்ற பயம்.
  • இயல்பாகவே நமது சமூகத்தில் வளர்ந்தவர்களுக்கு உள்ள சங்கோஜம்.

சின்ன வயதில் நடந்த விசயங்களை மட்டும் தயக்கமின்றி சிலர் பகிர்ந்து கொள்வதுண்டு. அதுவும் பெரும்பாலும் சின்ன வயதில் நடந்த குறும்புகளை பற்றியே இருக்கிறது. இதைப் போல் பண்டிகை சமயங்களில் வரும் நாஸ்டால்ஜியா வகை பதிவுகளும் சொந்த கதைகள் பேசுவதுண்டு.

இந்த ஃபார்முலாவில் இருந்து கொஞ்சம் விலகி நான் படித்த பதிவுகளில் வெகு சிலவே. ‘காசியின் சில விளக்குகள், சில வழிகாட்டிகள்‘, அந்த வகையில் மிகவும் இயல்பாக எந்த பாசாங்கும் இல்லாமல் எழுதப்பட்ட ஒரு தொடர். அவரது வலைப்பதிவின் பெட்டகம் பகுதியில் இந்த தலைப்பில் அவர் எழுதிய 15 பதிவுகளையும் படிக்கலாம்.

அரசியல், சினிமா, இசை, சூடான செய்திகள், அறிவியல் தொழில் நுட்பம் என்று அனைவரும் பல திசைகளில் முயற்சி செய்து கொண்டிருப்பது ஆரோக்கியமான விசயம் தான். ஆனல் இதனை தாண்டி சாமானியர்கள் பாசாங்கில்லாமல் எழுதும் முயற்சிகள் தமிழ் வலைப்பதிவுகளில் எப்பொழுது வரும்?

இந்த வகையில் கொங்கு ராசாவின் நடை மற்றும் அவரது சில பதிவுகள் என்னைக் கவர்ந்தவை.

கண்ணன் நன்றாக தூங்கிக்கொண்டிருந்தான். மதியம் இரண்டு மணி நேரம் தூங்கி விட்டபடியால் எனக்கு தூக்கம் வரவில்லை. படுக்கையில் புரண்டு புரண்டு பார்த்தேன். பதினைந்து நிமிட போராட்டத்திற்கு பின் இனியும் தாங்காது என்று எழுந்து கொண்டேன்.

இன்றைக்கு காலையில் ரமேஷுடன் ஃபோனில் பேசியதை பற்றி சொன்னேன் அல்லவா. மீண்டும் அவனுக்கு ஃபோன் செய்யலாமா என்று ஒரு யோசனை. இந்த நேரம் நன்றாக தூங்கிக் கொண்டிருப்பான். அவனையும் எழுப்பி விடுவதற்கு மனது வரவில்லை. போன மாதம் வாங்கின சிகரெட் பாக்கெடில் இன்னமும் ஒரு சிகெரட் மீதம் இருந்தது நியாபகம் வந்தது.

அதனை எடுத்துக் கொண்டு ஜன்னலுக்கு அருகே சென்று புகைக்க துவங்கினேன். பார்லிமெண்டில் பொது இடங்களில் புகைப்பதை தடை செய்ய முயற்சி செய்து வருவதாக இன்று காலையில் படித்தது நினைவுக்கு வந்தது. நாளைக்கு காலையில் ஆறு மணிக்கெல்லாம் கிளம்ப வேண்டுமே. இப்பொழுது தூக்கம் வேறு வரமாட்டேன் என்கிறது. அப்புறம் தீபாவளிக்கு வாங்கின சட்டைத் துனி இன்னமும் தைக்காமல் அப்படியே உள்ளே இருக்கிறது. மறக்காமல் அதனை நாளை தைக்க கொடுக்க வேண்டும். அப்புறம் கேட்க மறந்துட்டேன். உங்க வீட்டிலே தீபாவளி எல்லாம் எப்படி? சிறப்பு தானே?

சரி சரி.. நேரம் ஆகுது. சிகெரட் வேற முடிந்து விட்டது. நான் தூங்கப் போறேன். காலையிலே பார்ப்போம். குட் நைட்.

ஹி.. ஹி.. இது சும்மா ஒரு சாம்பிள் என்று நினைத்து நான் முயற்சி செய்தது.

3 thoughts on “என்ன மாதிரியான வலைப்பதிவர் நீங்கள்? – போஸ்ட் மார்டம்”

  1. நவன்,

    அந்த சொந்தக் கதை முதலில் என் பழைய ப்ளாக்ஸ்பாட் வலைப்பதிவில் எழுதியது, ஒரு மறுபதிப்பாக இருக்கட்டும்னு அங்கே போட்டு வைத்தேன். அதில் சில படங்கள் காணாமல் போயிருந்தன. மேலும் மறுமொழிகளுக்கு ப்ளாக்ஸ்பாட்டுக்குப் போகணும், அதுக்கு தொடுப்புக் கொடுக்கவேண்டியிருந்தது. இன்று உங்க புண்ணியத்தில் தள்ளிப்போட்டிருந்த வேலையை செய்துவிட்டேன்.
    டாங்க்ஸ்:)

  2. சுவாரசியமான அலசல். ஒரிஜினலிலும் போய் கேட்டுப் பார்த்தேன்; அதே விடைதான் இன்றும் வருகிறது 😉

    எனவே, சிறப்பான மொழியாக்கமும் கூட 🙂

  3. காசி: அந்தத் தொடரை சில மாதங்களுக்கு முன்பு வாசித்தேன். இன்னமும் அனைத்து பதிவுகளையும் வாசிக்கவில்லை. இன்று எனது வழங்கியின் statisticsஐ ஆராய்ந்து இந்த பதிவை எழுதும் போது வலைப்பதிவில் ‘வாழ்க்கை குறிப்பு்’ என்றவுடன் உங்களது அந்தத் தொடர் தான் சட்டென்று நினைவுக்கு வந்தது. அதற்கு காரணம் நான் படித்த அந்த சில பதிவுகள் என்னுள் ஏற்படுத்திய பாதிப்பு தான்.

    நிச்சயமாக பலருக்கு நம்பிக்கை அளிக்கக்கூடிய ஒரு படைப்பாக அது நெடுங்காலத்திற்கு விளங்கும். பாராட்டுக்கள்.

    பாலாஜி: நன்றி. அது என்ன ‘விடை’ என்று சொல்லவேயில்லையே??? 🙂

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *