07 ஜூலை 2005 – சில குறிப்புகள்

இந்த உலகிற்கு பயங்கரவாதம் ஒன்றும் புதிதல்ல. ஆனாலும் இன்றைய நிகழ்வுகள் இரு காரணங்களால் முக்கியத்துவம் பெருகிறது.

1. 2012 ஒலிம்பிக்ஸ் நடத்துவதற்கு இலண்டனை நேற்று தேர்ந்தெடுத்திருப்பது. இந்த வெற்றியிற்கான கொண்டாட்டங்கள் இன்னமும் முழுதாக துவங்கவில்லை. அடுத்த ஏழு வருடங்களில் இலண்டன் நகரம் காணவிருக்கும் மாற்றங்கள், அடையவிருக்கும் முன்னேற்றங்கள் என்று பிரித்தானியர்கள் கணவு கொண்டிருக்கும் போது வெடிகுண்டுகள் வெடித்திருக்கின்றன.

2. ஸ்காட்லாண்டில் இன்று காலை துவங்கிய G8 மாநாடு. உலகில் சக்தி வாய்ந்த (என்று சொல்லிக் கொள்ளும்) எட்டு நாடுகளின் தலைவர்களுடன் இந்தியா, சீனா போன்ற வேகமாக வளர்ந்து வரும் நாடுகளின் தலைவர்களும் கலந்து கொள்ளும் மாநாடு ஐக்கிய ராஜாங்கத்தில் நடக்கும் இந்த சூழ்நிலையில், நாட்டின் தலைநகரில் தாக்குதல்கள் நடத்தியிருப்பதன் மூலம் பயங்கரவாதம் உலகின் எந்த மூலையும் தனது எல்லையை தாண்டியதில்லை என்று நிரூபித்திருக்கிறது.

இலண்டன் நகரம், நாட்டின் அரசாங்கம், மாநகர காவல் துறை – இவர்களுக்கெல்லாம் இன்றைய நிகழ்வு பல காலமாக எதிர்பார்த்து வந்த ஒன்று தான்.

கடந்த வருடம் மார்ச்சு மாதம் இலண்டன் மேயர் கென் லிவிங்க்ஸ்டன், மாநகர காவல் தலைவருடன் இணைந்து அறிவித்த பத்திரிக்கை செய்தியின் சாராம்சம் இது தான். – “நகரம் தாக்கப்படுமா இல்லையா என்பதில்லை கேள்வி. கட்டாயமாக நாம் தாக்குதலுக்குள்ளாகும் ஆபத்தில் இருக்கிறோம். ஆனால் எங்கே எப்போது என்பது தான் இங்கேயுள்ள கேள்வி. ”

இதோடு கூட கடந்த வருடம் மத்திய இலண்டனின் ‘Bank’ பாதாள தொடர்வண்டி நிலையத்தில் தாக்குதல் சமயத்தில் எப்படி செயல்படுவதை என்று ஒரு சோதனையும் நடத்தி பார்த்தனர். அந்த சோதனையின் முடிவில் கண்டறிந்த பல ஓட்டைகள் இன்று உதவிக்கு வந்திருக்கிறது.

நகரின் பல இடங்களில் வெடிகுண்டுகள் வெடித்த நேரத்திலும் அமைதியாகவும் திறமையாகவும் நெருக்கடியினை கையாண்டிருக்கிறார்கள். இதற்காக காவல்துறையும் (Scotland Yard @ Metropolitan Police), தீயனைப்புத்துறையும், மருத்தவ குழுக்களும் நிச்சயமாக மக்களின் பாரட்டினை பெற தகுதி பெறுகிறார்கள்.

வெடித்திருக்கும் குண்டுகள் அனைத்தும் conventional bombs தான். இதே இடத்தில் Biological அல்லது chemical முறையில் தாக்குதல் நடந்திருந்தால் அதனால் என்ன நேர்ந்திருக்கும் என்பதனை நினைத்து பார்க்கவே முடியவில்லை.

பொது மக்களும் பெரும்பாலும் அமைதியாகவே இருந்தது இன்றைக்கு நிலமையினை கட்டுக்குள் வைத்திருக்க பெரிதும் வைத்திருக்க உதவியிருக்கிது.

என்னளவில் கடந்த ஒரு வருடமாக நான் பாதாள ரயில் பக்கம் வார நாட்களில் போவதில்லை. ஆனால் அதற்கு முன்னால் – ரயிலில் சென்று கொண்டிருக்கும் போதோ அல்லது ஒரு பாதாள ரயில் நிலையத்தில் ஒரு தடத்தில் இருந்து அடுத்த தடத்திற்கு மாறும் போதோ திடீரென்று “பாதுகாப்பு எச்சரிக்கை. அனைவரும் உடனடியாக வெளியேறுங்கள்” என்று அறிவிப்பு வரும். வெளியே வந்தால் பாதாள ரயில் நிலையத்தை பூட்டி விடுவார்கள். மாற்றாக பேரூந்தில் செல்வதாயிருந்தால் 2-3 மணி நேரம் கூடுதலாக ஆகும். ஓரிரு முறை இப்படி கூட்டத்தில் தொலைந்து போய் அதன் பின் பாதுகாப்பு எச்சரிக்கை என்று வெளியேற்றினால காலை நேரத்தில் ஏதாவது கஃபேக்கும், மாலை நேரமானால் பக்கத்தில் தென்படும் பப்’பிற்கும் போய் 30 நிமிடங்கள் செலவழித்து விட்டு மீண்டும் வந்தால் அதற்குள் மீண்டும் ரயில்கள் ஓடத் துவங்கியிருக்கும்.

இது போன்ற அனுபவங்களை பல முறை சந்திருப்பதனால் மக்கள் பீதியடைந்து ஒருவரை வரை முண்டிக்கொண்டு செல்லாமால் அமைதியாக வெளியேறுவது பழகிவிட்டது.

எனது நண்பர்கள் அனைவரும் இலண்டன் தாக்குதலுக்குள்ளாகும் எனறு நம்பிய/பயந்த போதும் நான் அதனை நம்பவில்லை.

காரணம் உலகில் உள்ள எல்லா தீவிரவாத இயக்கங்களுக்கும் இலண்டனில் ஏதோ ஒரு தொடர்பு இருந்து வந்திருக்கிறது/இருக்கிறது. பல பயங்கரவாத செயல்களுக்கு இங்கேயிருக்கும் சில குழுக்களிடமிருந்து நிதியுதவியோ, தாக்குதலுக்கான திட்டமிடலோ, அல்லது பயிற்சியோ கிடைத்து வந்திருக்கிறது. மற்ற நாடுகளில் குரல் கொடுத்தாலும் இங்கே இருக்கும் பயங்கரவாத குழுக்களை – அவர்கள் வெளிநாடுகள் மட்டும் செயல்படும் வரையில் பிரிட்டன் பெரிதாக கண்டுக் கொண்டதில்லை. இப்படியிருக்க இங்கேயே எந்தவிதமான பயங்கரவாத செயலினையும் செய்து தங்களை பலவீனபடுத்திக்கொள்ள மாட்டார்கள் என்றே நினைத்திருந்தேன்.

இன்றைய தாக்குதல் இந்த சமன்பாடினை மாற்றியெழுதியிருக்கிறது.

இதனை எவர் எக்காரணத்திற்காக செய்திருப்பினும் அதனை ஏற்றுக் கொள்ள முடியாது.

ஒவ்வொரு பிரிட்டிஷ்காரனும் இன்றைய குண்டுவெடிப்புகளுக்குக் காரணம்.” என்று சொல்வதினை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

அல்-கொய்தா, இஸ்லாமிய தீவிரவாதம் என்று அதற்குள்ளாக முடிவுக்கு வருவதும் தவறு. அனைத்து ஊடகங்களும், தலைவர்களும் அதற்குள்ளாகவே இந்த முடிவிற்கு வந்திருப்பதாக தோன்றுகிறது.

அமெரிக்கர்கள் புஷ்சினை இரண்டாவது முறை தேர்ந்தெடுப்பதற்கும், இங்கிலாந்தில் ப்ளேர் இந்த முறையும் தேர்ந்தெடுக்கப் பட்டிருப்பதற்கும் பல வேற்றுமைகள் உண்டு. இரண்டையும் ஒப்பிட முடியாது.

இது தொடர்பாக மேலும் பல விசயங்களை பற்றி எழுதவேண்டும்.

இப்போதைக்கு இஸ்லாமிய தீவிரவாதம், அல்-கொய்தா, பண்டைய வரலாறு, சமீபத்திய ஈராக்/அஃப்கானிஸ்தான் போர் என்பதையெல்லாம் போட்டுக் குழப்பிக் கொள்ள எனக்கு தோன்றவில்லை.

ஆனால் படுக்கைக்கு செல்லும் முன் இதனை எழுதிக்கொண்டிருக்கையில் குழப்பம் மட்டுமே மனதில் நிறைந்திருக்கிறது.

One thought on “07 ஜூலை 2005 – சில குறிப்புகள்”

  1. வெற்றிகரமான 100வது நாள்… சூப்பர் ஸ்டாரின் படம் நூறு நாட்கள் ஓடுவது எல்லாம் ஜுஜுபி… சந்திரமுகியின் வெற்றிக்கு காரணம் என்ன தெரியுமா?… நீங்கள் தான்.. நீங்களே தான்.. ரொம்ப தேங்க்ஸ்..!! உங்களின் நல் ஆதரவுக்கு! (எதிர்ப்போ, ஆதரவோ எதுவாக இருந்தாலும் நன்றி.. நன்றி.. நன்றி..! உங்களைப் போன்றோரின் ‘அந்த’ மாதிரியான ஆதரவினால் தான் வெற்றி மீது வெற்றி வந்து சூப்பர் ஸ்டாருக்கு சேருகிறது!) தமிழ் திரைப்படங்களில் நம்பர் 1 … சந்திரமுகி… தமிழ் வலைப்பூக்களில் நம்பர் 1 எது தெரியும் தானே?!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *